Home இலங்கை அரசியல் பல்கலைக்கு தகுதி இருந்தும் அனுமதி கிடைக்காத மாணவர்கள்: சபையில் சுட்டிக்காட்டிய தமிழரசுக் கட்சி எம்.பி

பல்கலைக்கு தகுதி இருந்தும் அனுமதி கிடைக்காத மாணவர்கள்: சபையில் சுட்டிக்காட்டிய தமிழரசுக் கட்சி எம்.பி

0

உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கு தகுதி பெற்றிருந்தும் அனுமதி கிடைக்காத ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன்(Shanmugam Kugathasan) சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், குறிப்பிட்ட தரப்பினருக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தின் இன்றைய(10.03.2025) குழுநிலை விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இதனை கூறியுள்ளார்.

கல்வித் துறை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின் பாடத்திட்டம்,கற்பித்தல் முறைமை, ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

நிதி ஒதுக்கீடு, ஆளணி மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது பாரதூரமான குற்ற செயலாகும். 

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு

உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டாக உட்கட்டமைப்பு மேம்பாடு, ஆராய்ச்சி மானியங்கள் மற்றும் தொழிற்துறை ஒத்துழைப்பு முதலியவற்றுக்கான ஒதுக்கீடுகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இலங்கையின் கல்விமுறை தொழிற் சந்தையுடன் இணைந்ததாக இல்லை. இதன் காரணமாகப் பட்டதாரிகள் தொழிற்சந்தையில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

எனவே நாட்டினுடைய பாடத்திட்டங்களை தொழிற்சந்தையுடன் இணைந்ததாக மாற்றியமைக்க வேண்டும்.”என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version