Home இலங்கை குற்றம் இலஞ்சம் வாங்கிய சட்டத்தின் காவலர்கள் : பிணை விண்ணப்பத்தை மறுத்த நீதிமன்றம்

இலஞ்சம் வாங்கிய சட்டத்தின் காவலர்கள் : பிணை விண்ணப்பத்தை மறுத்த நீதிமன்றம்

0

Courtesy: Sivaa Mayuri

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றப்பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோரின் பிணை விண்ணப்பத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த பிணை மனு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்களை ஜூலை 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

இன்றைய நடவடிக்கைகளின் போது, இலஞ்ச அல்லது ஊழல் தடுப்பு அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் பெற்றதாக கூறப்படும் 150 ஆயிரம் ரொக்கத்தை மன்றில் சமர்ப்பித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்பு- தெமட்டகொட கொழும்பு குற்றப்பிரிவு வளாகத்தில் வைத்து சந்தேக நபர்கள் இருவரையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்தது.

முன்னதாக, குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர், இணைய வர்த்தகத்தின் ஊடாக மோசடியான பணப் பரிமாற்றம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள்

இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தமது 454,200 ரூபாயை இலஞ்சமாக தரவேண்டும் என்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோரியிருந்தனர்

இதன்கீழ் ஏற்கனவே முறைப்பாட்டாளர், 300000 ரூபாயை குறித்த பொலிஸாருக்கு வழங்கியிருந்தார்.

அத்துடன் அவர் மீதி 150,000 ரூபாயை பொலிஸாருக்கு வழங்க முற்பட்டபோதே, கைது செய்யப்பட்டனர். 

NO COMMENTS

Exit mobile version