போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை ருவன்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் மஹர சிறைச்சாலையில் அதிகாரியாக கடமையாற்றி 2019ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் குறித்த நபர் தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கைது
இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இம்புலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 5,500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், கஞ்சா மற்றும் நுண்ணிய எடை அளவிடும் கருவிகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபரிடம் இருந்து போதைப்பொருள் வாங்க வந்த இன்னொரு நபரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரும் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Source: https://tamilwin.com/article/ex-prison-officer-arrested-due-to-drug-smuggling-1729229955
