யாழ்ப்பாணம், அரியாலை – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் இரண்டாம் கட்டத்தின்
இரண்டாம் நாள் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட
உடலங்களின் பாகங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதைகுழியில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.
தொடர்ந்து அகழ்வுப் பணி
செம்மணி – சித்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு
உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும்
தீர்மானிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இரண்டு உடலங்களின்
பாகங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு பணிகள்
நிறுத்தப்பட்டிருந்தது.
மனித உடலங்களின் பாகங்கள் அடையாளம்
குறித்த அகழ்வு பணிகள் நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பமான நிலையில் குறித்த
பகுதியில் மேலும்
ஐந்து மனித உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
