Home இலங்கை குற்றம் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல், பதுளை நீதவான் நுஜித் டி சில்வா மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவின் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்காக இன்று (23) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

உடலை தோண்டி எடுக்கும் பணி காலை 9.30 மணியளவில் தொடங்கி சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து 11.40 மணியளவில் நிறைவடைந்தது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக..

இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா கடந்த 9 ஆம் திகதி கொழும்பு தலைமை சட்ட மருத்துவ அதிகாரிக்கு பிறப்பித்த உத்தரவின் பேரில் 3 பேர் கொண்ட மருத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

தலைமை தடயவியல் மருத்துவர் பிரியந்த அமரரத்ன, மூத்த சிறப்பு தடயவியல் மருத்துவர் பி.ஆர். ருவன்புர மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் வைத்தியர் முதித விதானபத்திரண ஆகியோர் நிபுணர் தடயவியல் மருத்துவ குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்

இளைஞனின் மரணம் தொடர்பாக சட்ட மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனை திருப்திகரமாக இல்லாததால், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த 3 பேர் கொண்ட நிபுணர் மருத்துவ குழுவை நியமிக்க உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

பல தரப்பினரின் எதிர்ப்பு 

குறித்த மனு உள்ளிட்ட முந்தைய விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர் நீதவான் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவால் நடத்தப்பட்டன, ஆனால் பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், விசாரணை ஏப்ரல் 4ஆம் திகதி முதல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த 1ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் பொலிஸ் காவலில் இருந்த போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, மறுநாள் 02ஆம் திகதி அதிகாலையில், சந்தேகநபரான இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக பல தரப்பினரின் எதிர்ப்பு எழுந்த சூழலில், சத்சரவின் பிரேத பரிசோதனையில் திருப்தி அடையவில்லை என்று அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version