தற்போது கைரேகை ஸ்கேனர் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும், கைரேகை ஸ்கானர்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
பல அரச அலுவலகங்களில் ஏற்கனவே கைரேகை ஸ்கானர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், இதுவரை இந்த முறையைப் சிலர் பின்பற்றுவதில்லையென அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன ( A.H.M.H. Abayarathna) கூறியுள்ளார்.
கைரேகை ஸ்கானர்களை அனைத்து நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலதிக நேரக் கொடுப்பனவு
இந்தநிலையில் அது ஊழியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் ஒரு வசதியான செயல்முறை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமீபத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கொடுப்பனவுகள் துல்லியமாக வழங்கப்படுவதை உறுதி செய்வது மிக முக்கியமானது என அமைச்சர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு, அரச நிதியில் ஊதியம் வழங்கப்படுவதால், வேதனம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் முறையாகக் கணக்கிடப்பட வேண்டும் என அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
