Home இலங்கை குற்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி: பொலிஸார் வெளியிட்ட தகவல்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி: பொலிஸார் வெளியிட்ட தகவல்

0

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நேற்று (20) காலை 6.00 மணியளவில் சிலாபம் – சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சிலாபம் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், குறித்த வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதான தந்தை சேனாரத்ன, 44 வயதான அவரது மனைவி மஞ்சுளா நிரோஷனி, மற்றும் அவர்களது 15 வயது மகள் நெத்மி நிமேஷா ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வீட்டின் கீழ் மாடியில் உள்ள படுக்கையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்ததாகவும்,வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில்  உயிரிழந்த பெண் சிலாபம் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதுடன் அப்பிரதேச அறநெறி பாடசாலையில் ஆசிரியையாகவும் கடமையாற்றியுள்ளார்.

குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணை

அவரது கணவர் நிலம் மற்றும் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், மகள் சிலாபம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வந்துள்ளார்.

மேலும், எங்களுக்கு தெரிந்தவரை, இந்த வீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும்,  இந்த தீ விபத்திற்கு எந்தவித காரணமும் இல்லை என்றும்  சம்பவம் குறித்து பொலிஸார் முறையான விசாரணை நடத்தி விரைவில் உண்மைகளை கண்டறியுமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துளள்னர்.

 

இந்நிலையில், சம்பவம் ஆதாரங்களின் அடிப்படையில், பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் ஹலவத்தை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பாலித அமரதுங்கவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

NO COMMENTS

Exit mobile version