ஆசிய பசிபிக் பிராந்திய நோய்த்தணிப்பு மருத்துவ இணையத்தினால் (Asia Pacific
Hospice and Palliative Care Network) வழங்கப்படும் மதிப்புமிக்க
தொழில்வாண்மைப் புலமைப்பரிசில் வவுனியாவைச் சேர்ந்தவரும் தற்போது சுகாதார
அமைச்சில் மருத்துவ நிர்வாகப் பயிற்சியில் உள்ளவருமான மருத்துவர் செல்வராசா
மதுரகனுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ள குறித்த திறமை
அடிப்படையிலான போட்டித்தன்மைக்குள்ளாக தெரிவு செய்யப்படுவதுமான குறித்த
புலமைப்பரிசில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நூற்றுக்கணக்கான
விண்ணப்பதாரிகளில் திறமை அடிப்படையிலும் நேர்முகத்தேர்விலும்
தெரிவுசெய்யப்பட்டுள்ள எட்டுப்பேரில் ஒரே இலங்கையராக மருத்துவர் செ. மதுரகன்
இடம்பெற்றுள்ளார்.
பொதுநலவாய மருத்துவ சங்கத்தின் சிறப்பு விருது
குறித்த புலமைப்பரிசில் மூலம் கல்வி மேம்பாடு, தலைமைத்துவ
மேம்பாட்டுப்பயிற்சிகள், ஆய்வு போன்றவற்றுக்குரிய பல இலட்சம் பெறுமதியான
புலமைப்பரிசிலுக்கு அவர் உரித்துடையவராகின்றார்.
வடமாகாணத்தில் நோய்த்தணிப்பு மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதிலும்,
ஆரம்பிப்பதிலும் பல அரச மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து
பணியாற்றியுள்ள இவரது பல ஆய்வுக்கட்டுரைகள் சர்வதேச ஆய்வு மாநாடுகளில்
வெளியிடப்பட்டுள்ளன.
நோய்த்தணிப்புச் சேவைகளின் முக்கியத்துவம் பற்றியும், வலி மற்றும் ஏனைய
குணங்குறிகளைக் கட்டுப்படுத்துவதின் முக்கியத்துவம் பற்றியும், நோய்களால்
ஏற்படுத்தப்படும் நிதிச்சுமைமையக்குறைத்து சமத்துவமான சேவைகள் தனிநபர்
வேறுபாடின்றி அனைவருக்கும், வளங்கள் குறைவான பிரதேசங்களுக்கும் பகிரப்படுவதன்
முக்கியத்துவம் பற்றியும் இவரது ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த புலமைப்பரிசில் மூலம் இவரது தனிப்பட்ட முன்னேற்றம் மட்டுமன்றி
வடமாகாணத்திற்கும் எமது நாட்டுக்கும், நோய்த்தணிப்பு மருத்துவம் தொடர்பான
அறிவு மற்றும் ஆய்வு விருத்திக்கான பல கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
மருத்துவர் செல்வராசா மதுரகன் இந்த ஆண்டு ஜுலை மாதம் பொதுநலவாய மருத்துவ
சங்கத்தின் சிறப்பு விருதையும் (Fellowship of Commonwealth Medical
Association) பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
