Courtesy: கபில்
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கை
பாதிக்கப்பட்டுள்ளமையால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக
விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்திலே ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 7739.5 ஏக்கர்
நெற்செய்கையானது அழிவடைந்துள்ளது. இங்கு இம்முறை பெரும்போக நெற்செய்கையானது 62846.41 ஏக்கரில்
பயிரிடப்பட்டிருந்தது.
மாவட்டத்தின் வருட மழைவீழ்ச்சியில் 68 வீதமான மழை வீழ்ச்சியானது
குறித்த நான்கு நாட்களில் பெறப்பட்டமையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம்
காரணமாக அனைத்து குளங்களும் வான் பாய்ந்திருந்தமையாலும், 124 குளங்கள்
உடைப்பெடுத்திருந்தமையால் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின.
150,000 ரூபாய் வரை செலவு
குறிப்பாக ஒரு ஏக்கரில் நெற்செய்கையினை மேற்கொள்வதற்கு நிலத்தினை
பண்படுத்துவதற்கு, விதைநெல் மற்றும் பசளை, கிருமிநாசினிகள் உட்பட 150,000 ரூபாய் வரை செலவு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் வங்கிக்கடனை பெற்றும், தங்களது
நகைகளை அடகு வைத்தும் நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளின் நிலை தற்போது
கேள்விக்குறியாகியுள்ளது.
இதேவேளை அரசினால் வயல் அழிவிற்காக ஒரு ஹெக்டயருக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்
ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்பணத்தினை விரைந்து
வழங்கப்பட வேண்டும்“ எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
