கொழும்பின் பிரபல வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்த யுவதியை, மோசமாக சித்தரிக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விற்பனை உதவியாளராக பணியாற்றிய 19 வயதான யுவதியின் புகைப்படங்களை, செம்மை செய்து,பகிர்ந்த, அதே நிறுவனத்தை சேர்ந்த 36 வயதானவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியை திருமணம் செய்யுமாறு விடுத்த கோரிக்கையை மறுத்தமையினால் இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு செய்த யுவதி
பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியொருவர் கணனி குற்றத்தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக கையடக்க தொலைபேசி, அதை செயல்படுத்த பயன்படுத்திய மென்பொருள் மற்றும் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் போதைக்கு அடிமையானவர் என்றும், அவர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் பெண்ணுடன் உறவு வளர்க்க முயற்சித்துள்ளார்.
தவறான செயல்
எனினும் அது பெண்ணுக்கு பிடிக்காததால், சந்தேக நபர் வேறு பெண்ணின் புகைப்படத்துடன் இந்த யுவதியின் முகத்தை இணைத்து சமூகத்தில் மோசமான பெண்ணாக காட்டும் புகைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
நிறுவனத்தின் மற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வட்ஸ்அப் மூலம் இதனை அனுப்பியுள்ளார்.
சந்தேக நபரின் இழிவான செயலை சம்பந்தப்பட்ட வர்த்தக காட்சியறையின் பிரதான நிர்வாக அதிகாரிகளும் அறிந்திருந்ததாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலையத்தில் சுமார் ஆறு பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
Source: https://tamilwin.com/article/girl-rejected-proposal-boy-leaked-photos-1718947153
