Home இலங்கை சமூகம் அரச ஊழியர்கள் தொடர்பில் ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்

அரச ஊழியர்கள் தொடர்பில் ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்

0

இலங்கையில் அரச மற்றும் அரை – அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளதாக தெரியவருகிறது.

2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அரச ஊழியர்களின் எண்ணிக்கை

அந்த அறிக்கையில் மேலும்,

அரச மற்றும் அரை – அரச துறைகளில் மொத்தம் 1,150,018 ஊழியர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களில் 50.5% ஆண்கள் மற்றும் 49.5% பெண்கள் என அறிக்கை குறிப்பிடுகிறது.

2016ஆம் ஆண்டுக்குப் பின், அனைத்து அரச மற்றும் அரை – அரச துறை நிறுவனங்களின் ஊழியர்களின் முழுமையான ஆய்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

இதன்படி, அரசத் துறையில் 938,763 ஊழியர்களும், அரை – அரசத் துறையில் 217,255 ஊழியர்களும் பணியாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஆய்வின்படி, அரச மற்றும் அரை – அரசத் துறைகளில் மொத்தம் 1,119,475 ஊழியர்கள் இருந்தனர்.

2024 ஆய்வில் இந்த எண்ணிக்கை 46,543ஆல் அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் பணியாற்றுவோர்

இந்த அறிக்கையின்படி, அரசத் துறையில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் (59.5%) மத்திய அரசின் கீழ் பணியாற்றுகின்றனர்.

இந்த ஆய்வில் சுமார் 32,500 அரச மற்றும் அரை – அரச நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அரை – அரச நிறுவனங்களின் துணை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இராணுவம், கடற்படை, மற்றும் விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன், அரை – அரசத் துறையில் உள்ள தோட்டத் துறை தொழிலாளர்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version