வவுனியாவில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் சீருடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று மாலை வவுனியா – போகஸ்வெவ சலினிகம கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து,
அந்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்போது
வீட்டில் இரண்டு கிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குறித்த வீட்டை மேலும் சோதனை செய்தபோது, துப்பாக்கி ரவைகள்
மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சீருடைகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக
காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த வீட்டிலிருந்து T-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 296
ரவைகள், 12-போர் வகையை சேர்ந்த 27 ரவைகள், M-16 துப்பாக்கிகளுக்குப்
பயன்படுத்தப்படும் 19 ரவைகள், T-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும்
ரவைகளின் தொகுப்பு, T-56 துப்பாக்கிப் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் 124
பயிற்சி ரவைகள், 9 மிமீ தானியங்கி கைத்துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும்
365 வெற்று ரவைகள் மற்றும் 24 பயன்படுத்தப்பட்ட T-56 வெற்று ரவைகள் என்பன
மீட்கப்பட்டன.
அவற்றுடன் இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை சீருடைகள், அதற்கான பிரத்தியேக
பொருட்கள், காலணிகள், கால்சட்டை, தொப்பிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது
காவல்துறையினரின் விசாரணைகளில் வீட்டின் உரிமையாளர் காவல்துறை சிறப்பு அதிரடிப் படை
வீரர் என்பதும், அவர் குறித்த பொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருப்பதும்
தெரியவந்துள்ளது.
வீட்டின் உரிமையாளரான சிறப்புப் அதிரடி படை வீரரும் பொலன்னறுவை,
ஹிங்குராக்கொடை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு
தடுப்புக்காவலில் விசாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
