ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) உறுதி படுத்தியுள்ளது.
ஒரு வருடகால தேடுதலுக்கு பிறகு நேற்று காசாவின் தெற்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸின் மூத்த உறுப்பினர்களின் சந்தேகத்திற்கிடமான இடங்களைச் சுட்டிக் காட்டிய உளவுத் தகவலைத் தொடர்ந்து, தெற்கு காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அதில் சின்வாரும் அடங்குவதாக IDF தெரிவித்துள்ளது.
யஹ்யா சின்வாரின் உடல்
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை அடையாளம் காண இஸ்ரேலுக்கு பல் மருத்துவ பதிவுகள் உதவியுள்ளது, ஏனெனில் அவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கொலைக்காக இஸ்ரேலிய சிறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 07 நடத்தப்பட்ட தாக்குதல் சின்வாரால், திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாகவும், பல இஸ்ரேலியர்களின் கொலை மற்றும் கடத்தலுக்குப் பொறுப்பானவர் என்றும் IDF சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த விடயத்தை இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸும் (Israel Katz) உறுதிபடுத்தியுள்ளார்.
காசா போர் முடிவு
இந்த நிலையில், சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள போதிலும், ஹமாஸிடமிருந்து எந்த வித தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.
இதேவேளை, ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டிருந்தாலும், காசா மீதான இஸ்ரேலின் போர் இன்னும் முடிவுக்கு வரவில்ல என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/hamas-leader-sinwar-killed-israel-says-1729186743
