ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன கடமைகளைப்
பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஹட்டன் டிக்கோயா நகரசபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்
அசோக கருணாரத்ன மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் கே.டி
விஜேவர்த்தன முன்னிலையில் இன்று (11) காலை சுப நேரத்தில் சமய வழிபாடுகளுடன்
கடமைகளைப் பொறுப்பேற்றார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி பிரதம அதிதியாக
கலந்துகொண்டதுடன் ஹட்டன் டிக்கோயா நகரசபை உப தவிசாளர், ஆளும் மற்றும்
எதிர்கட்சி உறுப்பினர்களும் விழாவில் பங்கேற்றனர்.
கழிவகற்றல் பிரச்சினை
இதன்போது, கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, அழகான, சமாதான நகரமாக விளங்கும் ஹட்டன் டிக்கோயா நகரமானது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் சகல
உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அமைதியாக, அழகாக
வாழக்கூடிய நகரமாக மாற்றியமைத்துக் கொடுக்கப்படும்.
அத்தோடு நீண்ட கால பிரச்சினையாக காணப்படும் ஹட்டன் டிக்கோயா நகர
எல்லைப்பகுதி கழிவகற்றல் பிரச்சினைக்கு கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின்
ஊடாக கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
