யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப்
பணிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(16),மூன்றடி ஆழத்தில்
முழுமையான என்புத்தொகுதியொன்று மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், மண்டையோடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மனிதச் சிதிலங்கள், அந்தப் பகுதி ஒரு மனிதப் புதைகுழியா என பல்வேறு
ஐயப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.
படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம்..
அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை
செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்,
மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும்,
தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்றுமுன்தினம், அகழ்வு பணிகள் ஆரம்பமான நிலையில், நேற்றைய
இரண்டாம் நாள் அகழ்வின்போதே இந்த மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.முழுமையான என்புத்தொகுதி, மண்டையோடு என்பவற்றுக்கு மேலதிகமாக கை ஒன்றும்
மீட்கப்பட்டுள்ளது.
மனிதப்புதைகுழியா…!
இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து
மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம்
வெளியிடப்பட்டுள்ளது.
துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் மூன்றாம் நாள்
அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
நீதவான் ஆ.ஆனந்தராஜா அகழ்வுப் பணிகளைக் கண்காணிப்பார்.
அத்துடன்,
காணாமலாக்கப்பட்டோரைப் பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகளும், சட்ட
மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினரும் பிரசன்னமாகி
இருந்தனர்.
