ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதன்மூலம் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த அதிக வயதுடைய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம்பெற்ற ரோகித் சர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய அவர், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50 ஆவது சதத்தையும் ரோகித் சர்மா பூர்த்தி செய்திருந்தார்.
முதலிடத்திற்கு முன்னேற்றம்
இந்த தொடரில், அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக ரோகித் சர்மா 202 ஓட்டங்கள் குவித்த நிலையில், ஐசிசி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புள்ளிப் பட்டியலில் 36 புள்ளிகள் அதிகரித்து 781 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சச்சின் சாதனை முறியடிப்பு
2023 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்துவந்த ஷுப்மன் கில், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இதுவரை ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த அதிக வயதுடைய வீரராக சச்சின் இருந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு 38 வயது 73 நாள்களில் சச்சின் ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தார். தற்போது 38 வயது 182 நாள்களில் ரோகித் ஐசிசி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
