Home இலங்கை அரசியல் தென்னிலங்கை வேட்பாளர்களை புறக்கணியுங்கள் : சங்குச் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி வேண்டுகோள்

தென்னிலங்கை வேட்பாளர்களை புறக்கணியுங்கள் : சங்குச் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி வேண்டுகோள்

0

தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தேசியத்தை உறுதி செய்ய முடியும் என்ற தவறான கருத்தை பரப்பி திரிந்தவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) – அராலியில் நேற்றைய தினம் (10) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தொடர்ந்தும் தமிழ் தேசியத்திலே பயணித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் தென்னிலங்கை
வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தேசியத்தை உறுதி செய்ய முடியும் என்ற தவறான
கருத்தை கடந்த மாதம் தமிழ் மக்களிடையே பரப்பி திரிந்தவர்களை மக்கள்
நிராகரிக்க வேண்டும்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி

ஒட்டுமொத்தமாக தமிழ் தேசியத்தின் எழுச்சியை நீங்கள் முன்னெடுத்து
செல்வதற்கு, சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ள ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் தேசத்தின் திரட்சியையும், இன விடுதலை
வேட்கையையும், சமாந்தரமாக எங்களது அபிவிருத்தியையும் உறுதி செய்ய முடியும் என
நாங்கள் இங்கே உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அதுபோல வடக்கு மாகாணத்தில் பிரதான தொழிலாக கருதப்படுகின்ற, ஒன்றரை
இலட்சத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் அனுபவிக்கின்ற பாரிய பிரச்சினைகளை
நாங்கள் நிச்சயமாக தீர்த்து வைப்போம்.

குறிப்பாக 1996 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் பதினாறு
தொழில்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

கடற்றொழிலாளர் பிரச்சினை

அந்த தொழில்கள் இலஞ்சம், ஊழல்,
புறந்தள்ளல், தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காக அந்தத் தொழில்களை
அனுமதித்துக் கொண்டு, எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரத்தை நாசமாக்கி
கொண்டிருப்பதை தடை செய்வதற்கு வழி வகுப்போம்.

2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, இந்தியாவிலிருந்தும்,
வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்ற இழுவைமடி படகுகளை தடை செய்கின்ற
சட்டத்தையும் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

எங்களுடைய கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளையும், நீண்ட கால
பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதற்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம்.

இது
நமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கியமான ஒரு விடயமாக இருக்கும் என்பதை நாங்கள்
உறுதி கூறுகின்றோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version