சட்டவிரோத செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கான வெகுமதிகள் அதிகரிப்பு குறித்து பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வெகுமதிகள் அதிகரிப்பு
இதன்படி, ரீ – 56 ரக துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்கும் சந்தேகநபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், பிஸ்டோல் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் பொலிஸாருக்கு 4 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
வாய்ப்பு
சந்தேகநபரின்றி துப்பாக்கி மாத்திரம் மீட்கப்பட்டால் பொலிஸாருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்கும் நபருக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைதானால் பொலிஸாருக்கு 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 30 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
