சீன ஆராய்ச்சிக் கப்பல்களின் வருகை தொடர்பான பாதுகாப்புக் கவலைகளுக்கு இலங்கை உரிய கவனம் செலுத்தும் என்று இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார செயலாளரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு
அதன்போது, வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் மீதான தடையை நீடிப்பது குறித்து இந்தியத் தரப்பு ஆலோசித்ததா என்று அவரிடம் கேட்கப்பட்ட நிலையில் இதற்கு பதில் அளித்த அவர், “இலங்கை அரசாங்கம் இந்தப் பிரச்சினையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது எங்கள் புரிதல்.
அவர்கள் (இலங்கை) கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன.
கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் ஆராய்ச்சி போன்ற பல நடவடிக்கைகளில் இந்தியா ஆற்றக்கூடிய பங்கை நாங்கள் எங்கள் கண்ணோட்டத்தில் சிறப்பித்துக் காட்டினோம்.
இந்தப் பகுதியில் எங்களின் பாதுகாப்பு ஆர்வத்தின் முக்கியத்துவம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றை நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
மேலும் இந்தியாவின் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் இலங்கையின் நிலப்பரப்பைப் பயன்படுத்துவதன் மூலம் எதுவும் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்வதாக ஜனாதிபதி அநுர குமார மிகவும் வெளிப்படையாகக் கூறினார்.
விதிக்கப்பட்ட தடை
எனவே இந்த பிரச்சினைகள் அனைத்திலும் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து ஈடுபடுவோம், மேலும் இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் இலங்கை அரசாங்கத்தால் உரிய கவனம் செலுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கும் இலங்கையின் முன்னைய அரசாங்கம் தற்காலிக ஓராண்டு தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியா எழுப்பிய கடுமையான பாதுகாப்புக் கவலைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/india-s-expectations-about-china-s-spy-ships-1734383710
