Home இலங்கை அரசியல் தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

0

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை இன்று (23.12.2025) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது.

அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார்.

மீள் கட்டுமானம்

குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், சிறீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாகாண சபைத் தேர்தல்

இதேவேளை,  ஜெய்சங்கரைச்
சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை
இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் விரைந்து நடத்துமாறு இலங்கை அரசை
வற்புறுத்தும்படி ஒரே குரலில் அவரிடம் வலியுறுத்தினர் எனத் தெரியவந்துள்ளது.

சந்திப்பில் பங்குபற்றிய எல்லோருமே கருத்துக்களை வெளியிட்டனர். பெரும்பாலும்
அனைவரும் மாகாண சபைத் தேர்தலை இனியும் இழுத்தடிக்காமல் விரைந்து நடத்தும்படி
வலியுறுத்தினர்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அரசின் நிலைப்பாடு, கருத்து வெளிப்பாடுகள்,
நாட்டில் உள்ள நிலைமை ஆகியவை குறித்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின்
கருத்துக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் உன்னிப்பாகச் செவிமடுத்தார்.

ஒற்றையாட்சியின் கீழ் இறுதித் தீர்வு சரிவராது என்பதை கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.

சமஷ்டி கட்டமைப்பு

அதுவே தங்களின் நிலைப்பாடு என்று தெரிவித்த சுமந்திரன், சமஷ்டி அடிப்படையிலான
தீர்வு கட்டாயம், ஆனால் அந்த சமஷ்டி கட்டமைப்பு அதில் இருக்க வேண்டுமே தவிர,
பெயரை நாங்கள் வற்புறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மாகாண சபை முறைமை இனப் பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆயினும் இன்றைய நிலையில் மாகாண சபைத் தேர்தல்
இழுத்தடிக்காமல் நடைபெற வேண்டும் என்பதைத் தமது கட்சியின் வலியுறுத்துவதாக
இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டார்.

பேரிடர் மீட்பு நிவாரணப் பணிகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ்த்
தலைவர்களிடம் வினாவினார்.

நாட்டில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும்,
உள்ளூராட்சி சபைகளும் இருக்கின்ற அதே சமயம், அவற்றை புறமொதுக்கி, ‘பிரஜாசக்தி’
போன்ற வேறு கட்டமைப்புகள் மூலம் இந்த நிவாரணப் பணிகளை அரசியல்மயமாக்கி, அரசுத்
தரப்பு அதில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்று தமிழ்க் கட்சித்
தலைவர்கள் தெரிவித்த விடயங்களை மிக உன்னிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர்
உள்வாங்கிக் கொண்டார்.

மேலதிக தகவல்-ராகேஷ்

NO COMMENTS

Exit mobile version