Home இலங்கை பொருளாதாரம் செல்வந்த வரி நிறுத்தம் : அநுர அரசாங்கத்திற்கு எழுந்துள்ள சிக்கல்

செல்வந்த வரி நிறுத்தம் : அநுர அரசாங்கத்திற்கு எழுந்துள்ள சிக்கல்

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் செல்வந்த வரி விதிப்பிற்கான தீர்மானத்தை நிறைவேற்ற போவதில்லை என தெரிவித்திருந்தது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் 2025ஆம் ஆண்டு முதல் செல்வந்த வரி விதிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார பீடத்தின் பேராசிரியர் பிரயங்க துநுசிங்க கூறியுள்ளார்.

செல்வந்த வரி விதி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,  இலங்கை பொருளாதாரத்தில் குறைவான வருமானம் ஈட்டும் மக்கள் கூட்டத்தினரே அரச வருமானத்தில் பெரும் பங்காற்றுகின்றனர். அவர்கள் பெருமளவான வரியை அரசாங்கத்திற்கு செலுத்துகின்றனர்.

அரசாங்கத்தின் வரி விதிப்பு கொள்கை

அத்தோடு வரி விதிப்பில் அவர்களே பெருமளவாக பாதிக்கப்படுகின்றனர்.ஆனால் அதிகளவான வருமானம் ஈட்டும் மக்கள் கூட்டத்தினருக்கு வரியினால் கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறைவாகவே காணப்படுகிறது.

அவர்களுக்கு வரி விதிப்பு குறைவான சதவீதத்திலேயே காணப்படுகிறது. வரி அறவீட்டின் சாதாரண கொள்கை கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.வரி அறவீடு தொடர்பில் மறுசீரமைப்பை கொண்டு வருவதற்கு அரசுக்கு தேவையுள்ளதோடு அவசியமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் செல்வந்த வரி தொடர்பில் அரசாங்கம் மௌனமாக இருக்கிறது. அதைக் கொண்டு வருவதை தடுக்க அரசுக்கு ஏதோ ஒரு மறைமுக சக்தி அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது.

செல்வந்தர்களை பாதுகாக்க அரசாங்கம் முயற்சித்தால் அதை நாங்கள் கெட்ட சகுணமாகவே நோக்குகின்றோம். இன்றைய நிலையில் அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் பெருமளவான சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.

கடந்த காலங்களிலும் செல்வந்தர்களே செல்வந்த வரி விதிப்புக்கு தடையாக இருந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.   

Source: https://tamilwin.com/article/indirect-taxes-sri-lanka-tax-policy-1758188960

NO COMMENTS

Exit mobile version