Home இலங்கை அரசியல் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஒன்று சேரும் உலக நாடுகள்

போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஒன்று சேரும் உலக நாடுகள்

0

Courtesy: Sivaa Mayuri

போர்க்குற்றம் புரிந்ததாகக் கண்டறியப்பட்ட இலங்கை இராணுவத்தின் (Sri Lankan Army) தளபதிகளுக்கு எதிராக சர்வதேச அதிகார வரம்பிற்குட்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு பல நாடுகள் தற்போது இணைந்து செயற்பட்டு வருவதாக இலங்கையின் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால், வெளிநாடுகளின் குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்ட போதிலும், இராணுவத் தலைவர்கள் மற்றும் இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆதாரங்களை சேகரித்து வருவதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய தேசியப் பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, இலங்கை படை அதிகாரிகள் உலகின் எந்த நாட்டிலும் கைது செய்யப்படலாம் என்பதோடு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை

அத்துடன், இந்த வெளிப் பொறிமுறைக்கு இலங்கையில் நடந்த போரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் அல்ல, தமிழர்களுக்கு எதிரான போர் என்று வர்ணிக்கும் திறன் உள்ளது என்றும் நாடாளுமன்ற குழுவால் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த செயற்பாடு இலங்கைப் போர்வீரர்களின் சுயமரியாதைக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் ஏனைய நாடுகளின் போர்க்குற்றச்சாட்டுக்களை நிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குழுவின் தலைவர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஜெனிவா மனித உரிமைகள் அமைப்பினால் கொண்டுவரப்பட்ட வெளிப் பொறிமுறையை நிராகரிப்பதற்கான தந்திரோபாயங்கள் மற்றும் சர்வதேச இராணுவ தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சிடம் குழு கேட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/international-countries-action-against-sri-lanka-1718371646

NO COMMENTS

Exit mobile version