Home உலகம் காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : பரிதாபமாக 16 பேர் பலி

காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : பரிதாபமாக 16 பேர் பலி

0

காசாமுனையின் (Gaza) மத்திய பகுதியிலுள்ள ஒரு பாடசாலை மீது இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் (Hamas) ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் ஏழாம் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இஸ்ரேல் அரசு போர் 

இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்த நிலையில் ஓராண்டை கடந்து நடந்து வரும் குறித்த மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காசாமுனையின் மத்திய பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

 பாதுகாப்பு முகாம்

குறித்த பாடசாலையில், போரால் வீடுகளை இழந்த மக்கள் முகாமிட்டு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததாக பலஸ்தீன (Palestine) மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, நுசய்ரத் (Nuseirat Camp) என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு முகாம் மீதும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதலில் 32 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/israeli-army-attack-on-school-in-gaza-1729788427

NO COMMENTS

Exit mobile version