யாழ். மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சுருவத்தை மதுபோதையில் உடைத்து
சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும்
14 நாள்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிவான்
உத்தரவிட்டுள்ளார்.
முன்பதாக மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சுருவத்தை 20 பேர் கொண்ட
குழு ஒன்று கடந்த 25 ஆம் திகதியன்று நிறை போதையில் உடைத்து சேதப்படுத்தியதாக
குறித்த ஆலய நிர்வாகத்தினரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டிருந்தது.
தடுப்புக்காவல்
இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் NPP
என்னும் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன்
உள்ளடங்கலாக 8 பேர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். எஞ்சியோர்
தப்பிச்சென்றிருந்த நிலையில் பொலிசார் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில்
இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்கு
உட்படுத்தும் வகையில் நேற்றையதினம் ( 27) ஊர்காவற்றுறை
நீதிமன்றின் பொலிசார் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இதன்போது ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிவான் குறித்த 8 நபர்களையும் எதிர்வரும்
14 நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடிருந்தார்.
முன்பதாக தனிமைத் தீவாக இருக்கும் குறித்த ஆலய சூழலில் தேசிய மக்கள்
சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய
குழுவினர் மதுபான விருந்தொன்றை முன்னெடுத்திருந்த நிலையில் ஆலயத்திற்கு
சுற்றிலா சென்றவர்களுடன் முரண்பட்டுக்கொண்ட காட்சிகளுடன் அதிகளவான
மதுப்போத்தல்கள், ஆடு ஒன்றின் தலை உள்ளுட்ட பல்வேறு தடையங்களும்
வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
