Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024 வர்த்தக கண்காட்சி

யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024 வர்த்தக கண்காட்சி

0

யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன்,
“யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில்
நடைபெறவுள்ளது.

முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி முதல் 25ஆம்
திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

இந்த கண்காட்சியினை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். முதல் நாள்
நிகழ்வில் யாழ். இந்திய துணைவேந்தர், வடமாகாண ஆளுநர் ஆகியோர் பிரதம அதிதியாக
கலந்துகொள்வார்கள். இரண்டாம் நாள் கடற்தொழில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து
கொள்ளவுள்ளார்.

கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற
ஊடக சந்திப்பின் போதே ஏற்பாட்டாளர்கள் அதனை அறிவித்துள்ளனர்.

200க்கும் மேற்பட்ட காட்சி கூடங்கள்

கண்காட்சி தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில்,

“கட்டுமானம் மற்றும் பிற தொழில் துறைகளில் பங்காளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை
காட்சிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்கும் நோக்கில்
இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

200க்கும் மேற்பட்ட காட்சி கூடங்களுடன் பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழில்
வல்லுநர்கள், கட்டுமானம் மற்றும் பிற தொழில்களை இணைந்து மேம்படுத்துவதற்காக
ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.

அதே சமயம் சிறு தொழில் முயற்சியாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை
பிரபலப்படுத்தவும் உதவும்.

வடக்கு மற்றும் தெற்கு வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்தும் இந்த கண்காட்சியில்
கட்டுமானம் சார் இயந்திரங்கள், உபகரணங்கள், விவசாயம் சார் உபகரணங்கள், மின்
உபகரணங்கள், கைவினைபொருட்கள், செராமிக் மற்றும் கண்ணாடிப் பொருட்கள், வீட்டு
உபயோகப்பொருட்கள், சுகாதாரம், உணவு மற்றும் உடைகள் போன்ற பல துறைகளில் உள்ள
தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தவுள்ளன.

இந்த கண்காட்சியில், பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்வோருக்கு 40 வீதம் வரையில்
விலைக்கழிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வடக்கினை சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காட்சி
கூடங்களை வழங்கவுள்ளோம்.

கண்காட்சி நடைபெறும் நாட்களில் களியாட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version