யாழ்ப்பாணம் (Jaffna) – தெல்லிப்பழை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு
அருகாமையில் நேற்றையதினம் (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி
கௌதாரிமுனை பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு
முன்னர் திருமணம் செய்துள்ளனர்.
பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக
இருந்துள்ளனர்.
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை காவல் நிலையத்திற்கு
சென்றனர்.
நீதிமன்றின் தீர்ப்பு
இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு
முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தலாலும், இருவரும்
பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என
இளவாலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில்
இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை
பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என தீர்ப்பளித்தது.
இவ்வாறான பின்னணியில் வழக்கு நிறைவடைந்து வரும்போது பிற்பகல் 4.37 மணியளவில்
பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு
யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் இது குறித்து
தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சி.சி.டிவி கமெராவில் பதிவாகியிருக்கும் நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் பு.கஜிந்தன்
https://www.youtube.com/embed/EGUEUNqU1AE
