யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாழ்வகம் சமூக அமைப்பின் நிறுவுநர் மற்றும் தலைவராக இருந்து மறைந்த கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இடம்பெறவுள்ளது.
வாழ்வகத்தில் அமைந்துள்ள செல்லா மண்டபத்தில் இன்று (11) காலை 8.45 அளவில் நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
வாழ்வகத்தின் தலைவர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வாழ்வக சமூகம் கேட்டுக்கொண்டுள்ளது.
விழிப்புலனற்ற மற்றும் பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளின் வாழ்வை வளப்படுத்தும் ஒரு நிறுவனமாக கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மையார் அவர்களால் 1988ம் ஆண்டு யூன் மாதம் 29ம் திகதி வாழ்வகம் ஆரம்பிக்கப்பட்டது.
வாழ்வக நிறுவனமானது கடந்த 37 வருடங்களாக இலங்கை வாழ் தமிழ் பேசும் விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் அதன் ஊடான வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காகவும் அயராது பாடுபட்டு வருகின்றது.
நடைமுறையில் உள்ள கல்வி முறைகளுக்கமைவாக விழிப்புல வலுவிழந்த பிள்ளைகள் தமது கல்வியை பெற்றுக்கொள்ள வழி சமைத்து வரும் இந்நிறுவனமானது இலங்கையில் உள்ள ஒரேயொரு தனித்துவமான தொண்டு ஸ்தாபனமாக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
