அம்பாறையில் வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம்
கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (12) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை- சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி வீடு ஒன்று
உடைக்கப்பட்டு 2 பவுண் தங்க நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம்
திருடப்பட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமை (11) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சட்ட நடவடிக்கை
குறித்த முறைப்பாட்டின்
அடிப்படையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின்
ஆலோசனைக்கமைய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் சம்மாந்துறை 03 நெசவாலை வீதி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடம்
இருந்து 3 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் உட்பட வீடு உடைக்கப்பட்டு
கொள்ளையடிக்கப்பட்ட 2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் என்பனவும்
மீட்கப்பட்டுள்ளன.
மேலும்
சந்தேக நபர் உட்பட சான்றுப் பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த சம்மாந்துறை பொலிஸார்
நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
