Home இலங்கை சமூகம் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் நிகழ்வு

0

புதிய இணைப்பு

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல்
நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (19.102024) அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில்
இடம்பெற்ற நிகழ்வில் நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து,
பொதுச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

போர்ச்சூழலில் யாழில் இருந்து, துணிவாக ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம்
நிமலராஜன் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை மற்றும் உள்நாட்டு  ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார்

அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில்
ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த வேளை இவரது வீட்டினுள்  புகுந்த ஆயுத
தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிர் துறந்தார்.

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர்.

குறித்த படுகொலை சம்பவம் நடைபெற்று 23 வருடங்கள்
கடந்த நிலையிலும் இதுவரை விசாரணைகள் எதுவும் உரிய முறையில்
முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணத்தில் (Jaffna) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் (Mylvaganam Nimalrajan) 24 வது
நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பபில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு (Batticaloa) – காந்தி பூங்காவில் உள்ள படுகொலை
செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவுத்தூபி அருகில் இன்று (19.10.2024) நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

மட்டு
ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, அன்னாரின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் நினைவுச் சுடர் ஏற்றி
மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்பு மௌன இறைவணக்கம் இடம்பெற்றது.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப்
பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை
சம்பந்தமாக முன்னெடுக்கவுள்ள விசாரணைகளை வரவேற்பதாகவும் அதனை துரிதப்படுத்துமாறும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version