கொரிய எக்ஸிம் வங்கியால் இடைநிறுத்தப்பட்ட, இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியுதவியை மீண்டும் வழங்க அந்த வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று(03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த போதே இந்த உடன்பாட்டை வெளியிட்டுள்ளனர்.
நிதியுதவி
இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Source: https://tamilwin.com/article/korea-exim-bank-finance-development-projects-1728000727
