வவுனியாவில் மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர்
கைது செய்யப்பட்டதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (20.10.2025)
தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய
தகவலையடுத்து வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரட்ண விஜயமுனி அவர்களின்
ஆலோசனையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் விமல்
பியரட்ண தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த
போதை மாத்திரைக்கள் கைப்பற்றப்பட்டன.
மேலதிக விசாரணை
வவுனியா, ஏ9 வீதி ஊடாக வவுனியா நகரை நோக்கி பயணித்த பொலிரோ ரக வாகனத்தை
இ.போ.சபை சாலைக்கு அருகில் மறித்த பொலிசார் விசேட சோதனையை மேற்கொண்ட போது
குறித்த வாகனத்திவ் கருவாட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் போதை
மாத்திரைகள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த மாத்திரைகள் மற்றும் வாகனம் என்பன பொலிசாரால்
கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.
குறித்த வாகனத்தில்
இருந்து மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதுடன், அதனை வைத்திருந்த கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனும் கைது
செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
