மட்டக்களப்பு- மாந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுநோய் வைத்தியசாலையில் இயற்கையுடன்
கூடிய பயிற்சி நிலையம் ஒன்றை அமைக்கும் விதமான செயற்திட்ட முன்மொழிவு பிராந்திய சுகாதார சேவை பணிமனையினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த திட்ட முன்மொழிவு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து எதிர்வரும்
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் திட்ட முன்மொழிவு
சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட
பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர்
இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
விசேட நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில் ,மதுபாவனை புனர்வாழ்வு நிலையம், தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு மையம், மனநலம்
சார்ந்த தொடர்பு மையம், பாலியல் ரீதியான விழிப்புணர்வு மையம்,
பிச்சைக்காரர்களுக்கான் மறுவாழ்வு ஏற்பாடுகள், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான
தேவை நிலையம் என்பன அமைக்கப்பட்டுள்ளது. சில நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
பாடசாலை மாணவர்களிடையே வயதினை விட அதிக உடற்பருமன் கொண்டுள்ள விடயம் தொடர்பில்
விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
இலங்கையில் தொழுநோயில் மட்டக்களப்பு இரண்டு அல்லது மூன்றாவது நிலையில் உள்ளது.
இதற்கான நிலையத்தினை முன்முரமாக செயற்படுத்தி வருகின்றோம். காவேரி அமைப்பு
இதற்கான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது.
மருத்துவ சோதனை
மனரீதியான தாக்கங்கள் காரணமாக பாடசாலை இடைவிலகல்களும் அதிகரிக்கும் நிலை
காணப்படுவதுடன் இளம் வயது திருமணங்களும் அதிகரிக்கும் நிலைமையும்
காணப்படுகின்றன.
இவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பாடசாலை ரீதியாகவும் மருத்துவ
சோதனைகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
