திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப் போவதில்லை என்றும், தொடர்ந்தும்
தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என முத்து நகர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக மழையையும் பாராது இன்றுடன்(21) 66 ஆவது
நாளாக தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்களது 351 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து தனியார்
கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக காணிகளை அபகரித்ததையிட்டே
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
துறைமுக அதிகார சபை
தற்போது அங்குள்ள விவசாய குளங்களையும் மூடி குறித்த திட்டத்தை இலங்கை துறைமுக
அதிகார சபைக்கு சொந்தமான காணி என கூறி அடாத்தாக விவசாயிகளை வெளியேற்றி இதனை
செய்து வருகின்றனர்.
800 ஏக்கர் அளவில் காணி சுவீகரிப்பு செய்யப்பட்ட நிலையில் குறித்த விவசாயிகள்
வாழ்வாதாரத்தை இழந்து வீதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அபகரிக்கப்பட்ட
காணியை மீளத் தருமாறும் அல்லது மாற்றீடாக காணிகளை விவசாய செய்கைக்காக
வழங்குமாறும் கோரி பல போராட்டங்களை ஜனாதிபதி செயலகம் தொடக்கம் பிரதமர் செயலகம்
வரை முன்னெடுத்த போதிலும் தீர்வு வழங்கப்படாமை மன வேதனை அடைவதாகவும்
தெரிவிக்கின்றனர்.
1972ம் ஆண்டு முதல் தங்களது ஜீவனோபாயமாக விவசாய செய்கையை முன்னெடுத்த வந்த
முத்து நகர் விவசாயிகள் அநுர அரசாங்க ஆட்சியில் இவ்வாறு வீதியில் வெயில்
மழையிலும் போராடி வருவது மக்களை கஷ்டத்துக்குள் தள்ளும் ஆட்சியாக
காணப்படுகிறது.
மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை ஆளும் கட்சி பாராளுமன்ற
உறுப்பினர்களும் சிறுபான்மை மக்களுக்கான தீர்வில் பின் தங்கிய நிலையில்
உள்ளனர்.
எனவே முத்து நகர் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சத்தியாக்
கிரகப் போராட்டம் தொடரும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
