Home இலங்கை அரசியல் 40 சபைகளில் ஆட்சியமைக்கக் கூடிய நிலையில் சுதந்திரக் கட்சி

40 சபைகளில் ஆட்சியமைக்கக் கூடிய நிலையில் சுதந்திரக் கட்சி

0

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஒத்துழைப்பு
வழங்குவதற்கு அப்பால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாம் ஆட்சியமைப்பது குறித்து
அவதானம் செலுத்தியுள்ளோம். அந்தவகையில் 40 உள்ளூராட்சி சபைகளில் எம்மால்
ஆட்சியமைக்க முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி சபைகளில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் சபைகளை
நிறுவுதல், கூட்டணியமைத்தல் குறித்து அரசியல் குழு கூட்டத்தில் அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கமையவே உறுப்பினர்கள் தெரிவு
செய்யப்படுவர்.

ஆட்சியமைக்கக் கூடிய நிலைமை 

வேட்புமனுத் தாக்கலின்போது இடம்பெற்ற தவறுகளை நிவர்த்தி செய்து
கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும்.  ஏனைய கட்சிகள் சபைகளை அமைப்பதற்கு எமது ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும்.
அத்தோடு சில உள்ளூராட்சி சபைகளில் ஏனையோரின் ஒத்துழைப்புடன் எமக்கு
ஆட்சியமைக்கக் கூடிய நிலைமை கூட காணப்படுகின்றது.

இது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

சில தரப்பினருடன்
பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக மக்களுக்கு வழங்கப்படக் கூடிய சேவைகள்
தொடர்பிலேயே விசேட அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

சுமார் 100 உள்ளூராட்சி சபைகளில் எமது ஆதரவின்றி எவராலும் சபைகளை நிறுவ
முடியாது.

   

எவ்வாறிருப்பினும் நாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து
இன்னும் தீர்மானிக்கவில்லை.

உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் ஆளுந்தரப்பினர் சிலர். பொறுப்பற்ற கருத்துக்களை
வெளியிடுகின்றனர்.

தமக்கு வாக்களிக்காவிட்டால் நிதி ஒதுக்கப்பட மாட்டாது எனப்
பிரசாரக் கூட்டங்களின்போது ஜனாதிபதி அச்சுறுத்தி இருந்தார்.

அவரைப் பின்பற்றியே ஏனையோரும் இது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் அரசின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்
போவதில்லை. ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் எம்மால் 40 சபைகளில் ஆட்சியமைக்க
முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version