கொழும்பு மாவட்டத்தில் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்துக்குள் சரியான திட்டமிடல் இல்லாமல், பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழ் எடுக்கப்பட்ட தீர்மானங்களினாலேயே கொழும்பு மாவட்ட மக்கள் இந்த முறையில் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துமீறிய கட்டுமானங்கள்
எனினும், இனி இந்த விதமான அத்துமீறிய கட்டுமானங்கள் மற்றும் ஆபத்தான இடங்களில் மக்கள் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களுக்கு மாற்று வழிகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் நாம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, திட்டமிடல் இல்லாமல், சட்டதிட்டங்கள் பற்றி எவ்வித மதிப்பீடும் இல்லாமல், கொழும்பு மாவட்டத்தின் அபிவிருத்தி என்ற பெயரில் அத்துமீறிய கட்டுமானங்களை மேற்கொள்ளவும், குடியிருப்புகளை உருவாக்கவும் இடமளிக்க முடியாது.
கொழும்பு மக்களின் பாதுகாப்பு
கொழும்பு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் விதமாக, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்காக பொதுவான திட்டமொன்றை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதற்கமைய, அனைத்து நிறுவனங்களும் இணைந்து கொழும்பு மாவட்டத்தின் வெள்ளக் கட்டுப்பாட்டிற்காக ஒரு பொதுவான திட்டத்தை முன்வைத்து, அதன்படி செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
