இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட
பாரிய போதைப்பொருள் கையிருப்புடன் தொடர்புடைய முக்கிய முன்னேற்றங்களைச் சட்ட
அமுலாக்க அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின்
(SJB) உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவர் உட்படப் பலர் கைது
செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்
உறுதிப்படுத்தினர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வேட்பாளரின் பங்கு மற்றும் பரந்த தொடர்புகள் குறித்து தீவிர
விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
போதைப்பொருள் மீட்பு
பாதுகாப்புப் பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, இடைமறிக்கப்பட்ட போதைப்பொருள்
கடத்தல் படகிலிருந்து 200 கிலோகிராம் ஐஸ் மற்றும் 100 கிலோகிராம் ஹெரோயின் என
மொத்தம் 300 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த மதிப்பு சுமார் 4 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சோதனையின் போது போதைப்பொருள் பொதிகளுடன் இரண்டு துப்பாக்கிகளும்
மீட்கப்பட்டுள்ளன.
தெற்கு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையின் போது படகைக் கைப்பற்றிய
கடற்படையினர், அதனை மேலதிக விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
ஒப்படைத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை இன்னும் செயலில் உள்ளது என்றும், மேலதிக கைதுகளுக்கு
வாய்ப்புள்ளதாகவும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
