Home இலங்கை சமூகம் தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டி வடக்கு – கிழக்கில் நாளை பெரும் போராட்டம்

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டி வடக்கு – கிழக்கில் நாளை பெரும் போராட்டம்

0

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு
மாகாணங்களில் நாளை மாபெரும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கின் எட்டு
மாவட்டங்களிலும் சமநேரத்தில் (காலை 10 மணிக்கு) இந்த போராட்டங்கள்
இடம்பெறவுள்ளன.

போராட்டங்கள் இடம்பெறவுள்ள இடங்கள்

யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழிப் பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட
செயலகத்துக்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்துக்கு
அருகாமையிலும், வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையிலும், மன்னாரில்
நகர்ப் பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில்
காந்திப் பூங்கா பகுதியிலும், திருகோணமலையில் சிவன் கோயில் முன்பாகவும் இந்தப்
போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படும்
இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் இந்த போராட்டங்களை ஏற்பாடு
செய்துள்ளோம் என்று வடக்கு – கிழக்குச் சமூக இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கவனயீர்ப்புப் போராட்டம்

இதேவேளை, இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக “மாண்புமிகு மலையக மக்கள் சிவில்
சமூகக் கூட்டிணைவு” அமைப்பினர் கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின்
முன்பாக நாளை காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version