Home இலங்கை இலங்கையை வந்தடைந்தார் மாலைதீவு ஜனாதிபதி

இலங்கையை வந்தடைந்தார் மாலைதீவு ஜனாதிபதி

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமோகமாக வரவேற்றார்.

விசேட மரியாதை 

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை விமானப் படையினரால் மாலைதீவு ஜனாதிபதிக்கு இதன்போது விசேட மரியாதை வழங்கப்பட்டதுடன், அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறுவர், சிறுமியர் இரு நாடுகளினதும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் நின்று மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்றனர்.

மாலைதீவு – இலங்கை இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 61 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த விஜயத்தை முன்னிட்டு, மாலைதீவு ஜனாதிபதி விமான நிலையத்தின் விசேட விருந்தினர் பகுதியில் உள்ள நினைவுப் புத்தகத்தில் குறிப்பொன்றையும் இட்டார்.

நீண்டகால நட்புறவு 

ஜனாதிபதி முகமது முய்சு, 2023 ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து மாலைதீவு ஜனாதிபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இரு நாடுகளினதும் பொதுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

மேலும், மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர், கொழும்பில் நடைபெறவுள்ள விசேட வர்த்தக சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி முய்சுவுடன் அவரது பாரியார் சாஜிதா முகமது மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர். 

முதல் இணைப்பு

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு, 2023-ல் பதவியேற்ற பிறகு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் அரசமுறைப் பயணமாக, இன்று (03) இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் அவர் வருகை தருவார் என்றும், 6ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை விஜயம்

இந்தப் பயணத்தின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி முய்ஸு, ஜனாதிபதி திசாநாயக்கவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த வருகையை முன்னிட்டு இன்று (03) முதல் 6ஆம் திகதி வரை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/maldives-president-mohamed-muizzu-arrive-sri-lanka-1777801508

NO COMMENTS

Exit mobile version