Home இலங்கை சமூகம் இலங்கையில் பணத்தை திருடிய நபர் : 50 ஆண்டுகளுக்கு பின் திருப்பிக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்

இலங்கையில் பணத்தை திருடிய நபர் : 50 ஆண்டுகளுக்கு பின் திருப்பிக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்

0

மலையகத்தில் 1970 காலக்கட்டத்தில் திருடிய பணத்திற்கு நட்ட ஈடாக சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை தொழிலதிபர் ஒருவர் திரும்ப செலுத்தியுள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் மஸ்கெலியா (Maskeliya) அருகே அலகொல பகுதியில் அமைந்திருக்கும் தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் மற்றும் எழுவாய் என்ற தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.

வீட்டை காலி செய்யும் போது, வேலைகளை செய்வதற்கு உதவியாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுவனான ரஞ்சித் என்பவரின் உதவியை அந்த தம்பதியினர் நாடியுள்ளனர்.

சிறு தொகை பணம் 

பொருட்களை பழைய வீட்டிலிருந்து மாற்றி புதிய வீட்டில் வைக்கும் வேலை நடந்துகொண்டிருந்த நிலையில் ஒரு தலையணையைப் புரட்டிய போது அதற்கு அடியில் ஒரு சிறு தொகை பணம் இருந்ததை குறித்த சிறுவன் ரஞ்சித் கவனித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த பணத்தை வீட்டாருக்கு தெரியாமல் எடுத்துகொண்ட அவர் அதனை நண்பர்களுடன் சேர்ந்து செலவழித்துள்ளார்.

இந்தநிலையில், சிறு காலம் கழித்து குறித்த சிறுவன் ரஞ்சித், மலையகத்தில் நிலவிய வறுமை காரணமாக இந்தியாவில் (India) தமிழ் நாட்டிற்கு (Tamil Nadu) சென்றுள்ளார்.

தொழிலதிபராக வளர்ச்சி

தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் உழைப்பின் பின் தொழிலதிபராக வளர்ச்சி பெற்ற ரஞ்சித், தான் செய்த தவறை நினைத்து கவலை அடைந்துள்ளார்.

இதையடுத்து, தமிழ்நாட்டிலிருந்து இலங்கை புறப்பட்ட அவர் குறித்த குடும்பத்தினரை சந்தித்து நடந்தவற்றை விபரித்து இலங்கை ரூபாவில் மூன்று இலட்சம் ரூபாவை திரும்ப அளித்துள்ளார்.

குறித்த செயலானது அந்த குடும்பத்தாரையும் மற்றும் அப்பிரதேச மக்களையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version