மன்னார் படுகையில் இந்த ஆண்டுக்கான பெட்ரோலிய ஆய்வு உரிமம் வழங்கும் சுற்றை அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (25) இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் தொழில் அமைச்சர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நான்கு ஆய்வுத் தொகுதிகள்
புதிய உரிமம் வழங்கும் சுற்றின் கீழ், மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவை உள்ளடக்கிய நான்கு ஆய்வுத் தொகுதிகள், சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு ஆய்வுப் பணிகளுக்காக வழங்கப்படவுள்ளன.
மன்னார் படுகையில் முன்னெடுக்கப்பட்ட முந்தைய ஆய்வுகளின்போது இயற்கை எரிவாயு மற்றும் திரவ ஹைட்ரோகார்பன்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், அப்பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவிக்கையில், இதுவரை ஒப்பீட்டளவில் பெருமளவு ஆய்வு செய்யப்படாத மன்னார் படுகைப் பகுதி, நவீன புவியியல் ஆய்வு முறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள சர்வதேச நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அதிகாரசபையிடம் தற்போது உள்ள மன்னார் படுகை தொடர்பான புவியியல் தரவுகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அணுகுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நீல் டி சில்வாவின் கூற்றுப்படி, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில், மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலியமும், 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவும் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை துளையிடுதல் மூலம் பிரித்தெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/mannar-basin-petroleum-exploration-license-1787662345
