Home இலங்கை சமூகம் மன்னார் சோழமண்டலகுளம் காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னார் சோழமண்டலகுளம் காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

0

மன்னார் (Mannar) – சோழமண்டலகுளத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட காணி பணம்
படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாட்டு கடிதத்தை மன்னார் மாவட்ட பொது
அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்றைய தினம் (17.08.2024) அனுப்பி வைத்துள்ளார். 

இந்த கடிதத்தில், “மன்னார் – சோழமண்டலகுளம் காணி விடயம் தொடர்பாக பல முறை உங்களுக்கு கடிதம்
எழுதி பயனற்று போய்விட்டன.

பலமுறை முறைப்பாடுகள் 

30 ஆண்டுகளாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் 100
ஏழை விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு பெரு வணிகர்களுக்கும் கொழும்பிலும்
வெளிநாட்டிலும் இருப்பவர்களுக்கும் சட்டவிரோதமாக காணி வழங்கி உள்ளீர்கள்.

நீதியின் பரிபாலனமின்றி அநீதியாக உங்கள் அமைச்சர்கள் சலுகை பெற்றுக் கொண்டு
இக்காணியை வழங்கியுள்ளார்கள் என்பதே வெளிப்படையான உண்மை.

இவ்விடயம் குறித்து அரசாங்க அதிபர் பலமுறை வேண்டுகோள்
விடுத்துள்ளார். இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பல
தடவைகள் எழுத்து மூலமும் நேரடியாகவும் தெரிவித்துவிட்டனர்.

இதற்காக பல கூட்டங்களும் நடந்தேறிவிட்டன. ஆனால், எங்கும் நீதி கிடைக்கவில்லை. ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான காணியை அபகரித்தமை அடிப்படை உரிமை
மீறலாகும்.

தேர்தல் புறக்கணிப்பு 

வாழ்வுரிமையின் அடிப்படை உரிமை மறுக்கும் இந்த நாட்டின் நீதியற்ற
நிர்வாகவியலின் ஜனாதிபதி தேர்தலை முழுமையாக புறக்கணிக்கிறோம்.

எந்த
வேட்பாளருக்கும் நாம் வாக்களிக்க தயாராக இல்லை.

எமது அடிப்படை உரிமையை பெற முடியாத இந்த நாட்டில் குடியிருந்து என்ன பயன்?

இந்த நூறு குடும்பங்களின் வாழ்வுரிமையை மறுக்கும் தங்களின் அரசால் இவர்களை இங்கிருந்து நாடு கடத்தி விடுங்கள். சமநீதி, சமத்துவம், சமூக நீதி மற்றும் அடிப்படை வாழ்வுரிமை இல்லாத நாட்டில் வசித்து என்ன பயன்?

பணம் உள்ளவர்கள்
மட்டுமே வாழலாம்.

அவர்களுக்கு மட்டுமே இந்த அரசு சகல விடயங்களிலும் முன்னுரிமை வழங்குகின்றது.
தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்வு மட்டுமல்ல அடிப்படைப் பிரச்சினையையும்
புறக்கணிக்கும் தாங்கள் எப்படி
பல்வகைமைச் சமூகத்தின் தலைவராக மிளிர்ந்து விட முடியும்.

காணி பிரச்சினை

இந்த நாட்டிலே ஏதிலிகள் குடியிருந்து என்ன பயன்? அவர்களின் உரிமைகளை
அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் சகல வழிகளிலும் நசுக்கி வருகிறீர்கள்.

எனவே, உடனடியாக தேர்தலுக்கு முன்னதாகவே இந்த காணி பிரச்சினை தீர்க்கப்பட்டு
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

உலகிற்கு ஜனநாயகமும், சமத்துவமும் பற்றி புத்தி புகட்டும் தாங்கள்
உள்நாட்டில் சாமானியனின் ஜனநாயகத்திற்கு சாவு மணி அடிப்பது தான் நடு நிலையான
ஆட்சியா?

நல்லாட்சி என்பது பாதிக்கப்பட்டவன் பக்கம் நிற்பதே. முதலாளித்துவத்திற்கு ஆதரவான அரசு பாட்டாளிவர்க்கத்தின் விரோதியே!

எனவே, இப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் வரும் ஜனாதிபதி
தேர்தலை நாம் முழுமையாக புறக்கணிப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version