Home இலங்கை அரசியல் வளிமண்டலவியல் திணைக்களப் பிரதானி வீட்டுக் காவலில் – தயாசிறி குற்றச்சாட்டு

வளிமண்டலவியல் திணைக்களப் பிரதானி வீட்டுக் காவலில் – தயாசிறி குற்றச்சாட்டு

0

 வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தற்போது “வீட்டு காவலில்” வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தனது குழந்தையுடன் கூட பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசின் குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வரலாம் என்ற அச்சத்தினால், பாதுகாப்பு அமைச்சு ஊடாக அவரை கட்டுப்படுத்த அரசு முயற்சிப்பதாகவும் தயாசிறி குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை காலநிலை ஆய்வாளர்கள் சங்கம் சமர்ப்பித்த ஏழு பக்க அறிக்கையின் படி, கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு அதிகாரிகள் அதனை அறிவித்திருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அரசாங்கம் அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் நாசகார எதிர்க்கட்சியாக செயல்பட்டவர்களே இன்று ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், தற்போதைய எதிர்க்கட்சியின் நேர்மையான தலையீடுகள்கூட அவர்களுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றுகிறது என்றும் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

பேரழிவுகளால் உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான துல்லியமான தரவுகளை கூட அரசாங்கம் வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மரணச் சான்றிதழ்கள் வழங்கும் தருணங்களிலும் புகைப்படங்கள் எடுத்து விளம்பரம் தேடும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பேரழிவால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் 2 இலட்சம்  ரூபா உதவி போதுமானதல்ல எனக் கூறிய அவர், அவர்கள் மீண்டும் எழுந்து நிற்க 7% அல்லது 8% குறைந்த வட்டி விகிதத்தில் சலுகை கடன் திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றில் கோரியுள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version