2025 ஜனவரி 1 முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் அமெரிக்க
டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கூறியது தொடர்பில் சுற்றுலாத் துறை பிரதி
அமைச்சர் ருவான் ரணசிங்க விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, ஜூன் மாத இறுதியில்
சுற்றுலாவில் இருந்து ஈட்டப்பட்ட வருமானம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், அதில் ஜூலை மாதத்திற்கான தரவு இன்னும் சேர்க்கப்படவில்லை என்றும்,
ஜூலை மாதத்தில் மட்டும் இவ்வளவு அதிக வருமானம் ஈட்டப்பட்டிருக்கும் என்று தான்
நம்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வருமானம்
வெளியுறவு அமைச்சரின் அறிக்கைக்கும் உண்மையான தரவுகளுக்கும் இடையே
குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது.
அத்துடன், ஜூலை மாதத்தில் மட்டும், பெருந்தொகை டொலர்களை வருமானமாக
பெற்றிருக்கமுடியாது என்று தாம் தனிப்பட்ட முறையில் கருதுவதாகவும் ருவான்
ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நுவரெலியாவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய வெளியுறவு, வெளிநாட்டு
வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஜனவரி முதல் சுற்றுலாப்
பயணிகளின் வருகையிலிருந்து 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்
ஈட்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்த ஆண்டு மேலும் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய்
எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
