புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 15ஆம் திகதி நடைபெற்றது.
வினாத்தாள் கசிந்ததுள்ளதாக தகவல் வௌியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை நடத்தியது.
அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையுடன் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி, விசாரணை முடிவுகளின்படி செயற்படுமாறு ஜனாதிபதியும் அமைச்சரும் ஆலோசனை வழங்கினர் என்றார்.
பாடசாலைகளுக்கு விடுமுறை
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நாளை (21) நடைபெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka) கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
இவ்வாறு இன்றைய தினம் மூடப்படும் சகல பாடசாலைகளும், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/moe-announcement-grade-5-scholarship-exam-1726817466
