Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு பணி மூன்றாம் கட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு பணி மூன்றாம் கட்டம் ஆரம்பம்

0

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மூன்றாம் கட்டமாக இன்று (04.07.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 2023 ஆம் ஆண்டு ஆனி மாதம் தொடக்கம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

நிதி ஒதுக்கீடு

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி தொடர்பான வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாமை காரணமாக வழக்கு விசாணைகள் தவணையிடப்பட்டிருந்தது.

மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு தொடர்பான வழக்கு 16.06.2024 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இந்நிலையில், அகழ்வு பணியினை நடாத்த நிதி கிடைக்கப்பெற்றதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம் நீதிமன்றில் தெரிவித்தார்.

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 

இதனையடுத்து கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து இன்று மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இன்று கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, பேராசிரியர் ராஜ் சோமதேவ, காணாமல் போனோர் பணியக தலைவர் உள்ளிட்ட சட்டத்தரணிகள், கொக்கிளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர்,வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உள்ளிட்ட அனைவரும் கலந்துரையாடி அகழ்வு பணிகள் மூன்றாம் கட்டம் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

10 நாட்கள்

இன்று மூன்றாம் கட்டமாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதுவரை காலமும் போதிய நிதி ஒதுக்கீடு இன்மை காரணமாக காலம் தாழ்த்தப்பட்ட அகழ்வு பணியானது போதிய நிதி ஒதுக்கீட்டின் பின்னர் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு 10 நாட்கள் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 40 மனித எலும்புகூட்டுத்தொகுதிகள் முற்றாகவும் பகுதியாகவும் மீட்கப்பட்ட நிலையில் இப்பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் இதுவரை அகழப்படாத பகுதி மனித எலும்புகூட்டுத்தொகுதிகள் இருக்கும் என்று சந்தேகிக்கின்ற பகுதி துப்பரவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version