Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் சொந்த காணிகள் இருந்தும் இடமின்றி தவிக்கும் மக்கள் கடும் ஆதங்கம்..!

முல்லைத்தீவில் சொந்த காணிகள் இருந்தும் இடமின்றி தவிக்கும் மக்கள் கடும் ஆதங்கம்..!

0

வட்டுவாகல் கோட்டாபய கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளின்
விடுவிப்பு தொடர்பாக வட்டுவாகல் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள்
இணைந்து  கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். 

குறித்த கலந்துரையாடலானது உதயசூரியன் சனசமூக நிலையத்தில் நேற்றைய தினம் (25.04.2025) இடம்பெற்றுள்ளது. 

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான
குறித்த கலந்துரையாடலில் வட்டுவாகல் கோட்டாபய கடற்படையினரால் மக்களுடைய 617
ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாது இருப்பது தொடர்பாக பல விடயங்கள்
கலந்துரையாடப்பட்டிருந்தது.

விவசாய நிலம் 

கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போது,

தென்னை, பனைவளம், வயல் நிலங்கள், முந்திரிகை இருந்தும் அதன் பயனை பெற
முடியாதளவில் இருக்கின்றோம்.

எங்களுடைய மூதாதையர்களுடைய சொத்தினை நாங்கள்
பார்க்காமல் போய்விடுவோமோ என்ற பயம் எங்களுக்குள்ளே இருக்கின்றது.
கடற்படையினர் தமது சொந்த நிலம் போல் அப்பகுதியின் அருகாலே செல்ல முடியாத நிலை
இருக்கிறது.

காணிகளை இழந்த மக்கள் மறுகரையில் அயலவர்களது காணிகளிலும்,
உறவினர்களது காணிகளிலும் குடியிருக்கிறார்கள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரிசி , தேங்காய், கஜூ உற்பத்திகள் போன்ற
வாழ்வாதாரத்தை நம்பி வாழ்ந்த மக்கள் நிலத்தை மக்களிடம்
ஒப்படைக்கப்பட்டிருந்தால் இந்த மக்களின் பொருளாதாரம் ஒருபடி
மேலுயர்ந்திருக்கும்.

முன்வைக்கப்படும் கோரிக்கை 

காணிகள் விடுவிக்கப்படுமா என்ற கவலையில் இன்று வரையிலும்
இருக்கின்றார்கள்.

காணிகள் கிடைத்து அங்கு சென்று வாழ்ந்து விடலாம் என்ற ஆசைகளுடன் வாழ்ந்தவர்கள்
ஆசைகள் நிறைவேறாமலே சிலர் உயிரை மாய்த்திருக்கின்றார்கள்.

மாற்று காணிகள்
எவையும் எமக்கு தேவையில்லை எமது சொந்த நிலமே எமக்கு தேவை. எமக்குரிய வயல்
நிலங்களில் கடற்படையினர் துப்பரவு செய்து மூன்று ஆண்டுகளாக வயல் விதைத்து
வருகின்றார்கள்.

ஆனால் வயல் விதைப்பதற்கான சான்றுகள் அதாவது வயல்
நிலங்களிற்கான பணம் எடுப்பதற்கான ஆதாரம் எம்மிடம் இருக்கின்றது.

மூன்று சந்ததிகளை கடந்து வந்திருக்கின்றோம்.

அவர்களுக்கும் இந் நிலம் கிட்டுமோ
என்று தெரியாத நிலை இருக்கிறது. கடல்வளம், விவசாயம், கால்நடைகளை நம்பி
வாழ்கின்றோம். தற்போது அரசாங்கம் மாறியிருக்கின்ற இந்த காலத்திலாவது உண்மையான
, நேர்மையான , நியாயமான தீர்வுடன் இந்த காணிகளை எங்களுக்கு விடுவிக்க ஜனாதிபதி
ஆவன செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version