திருகோணமலை முத்துநகர் – தகரவட்டுவான் விவசாய நிலப் பகுதியில் விவசாயிகள் இன்று (20) கடும் மழையையும் பாராது கொடும்பாவி எரித்து
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மாவட்டம் முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 விவசாய குடும்பங்கள்,
தங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த விவசாய நிலங்கள் இழந்ததால் கடும்
பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
முத்து நகர் விவசாய நிலத்தை சூரிய மின் சக்தி
உற்பத்திக்காக அப் பகுதி குளத்தையும் மூடியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
சுமார்
ஒரு மாதத்திற்கு முன்பு பிரதமர் விவசாயிகளை சந்தித்து தீர்வு வழங்குவதாக
உறுதியளித்திருந்தாலும், அதுவும் மேலும் காலதாமதமாக மாறியுள்ளதாக
காணப்படுகிறது.
பிரதமர் அலுவலகத்துடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது, மாவட்டத்தின் ஆளுங்
கட்சியின் சில பிரதிநிதிகள் மற்றும் சில பிரதேச அதிகாரிகள் இந்த நிலப்
பிரச்சினை தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியிருப்பது வெளிச்சத்துக்கு வந்ததாக
விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறிய தவறான தகவல்களில் முத்துநகர் பகுதியில் முன்பாகவே குளம் இருந்ததில்லை,
இருந்த குளங்கள் மூடப்படவில்லை,
மற்றும் இப்பகுதியில் சரியான விவசாய நிலங்கள் இல்லை
என்ற குற்றச்சாட்டுகள் அடங்குகின்றன.
போராட்டம்
மேலும், தஹரவட்டுவான் குளத்தையும் எதிர்வரும் நாட்களில் அழிக்கும் திட்டங்கள்
இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தநிலையில், மேலே குறிப்பிடப்பட்ட செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,
இன்று (20) மழையை கூட பொருட்படுத்தாமல் தஹரவட்டுவான் குளப் பகுதியில்
நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது தேசிய மக்கள் சக்தியின் ஆளுங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இருவரினதும் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டமும் தொடராக இன்றும் 65 ஆவது
நாட்களாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
