காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் குழுவினரால் மோட்டார்
சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார்
காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு
விசேட அதிரடிப்படையினர் நேற்று(06.11.2025) சோதனை நடவடிக்கை ஒன்றை
மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலத்தில் பாரியளவில் குழி
இதுபற்றி தெரியவருவதாவது, குறித்த பகுதியான தாழங்குடா கடற்கரை பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 17ஆம் திகதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் சஹ்ரான் குழுவினரால் மோட்டார்
சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்தனர்.
இந்த பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியை சுற்றி தகரத்தால் வேலி
அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வந்துள்ளார்.
இந்த நிலையில்
கடந்த 4ஆம் திகதி காணியின் உரிமையாளர் அங்கு சென்ற போது நிலத்தை பாரியளவில்
குழி தோண்டப்பட்டு இருப்பதை அவதானித்துள்ளார்.
மீண்டும் சஹ்ரான் குழு போன்றவர்கள்
இதையடுத்து. மீண்டும் சஹ்ரான் குழு போன்றவர்கள் போல ஏதாவது
அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சத்தை அடுத்து நேற்றுமுன்தினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில்
சில தீய சக்திகள் அந்த பகுதியில் ஏதாவது வெடிபொருட்கள் அல்லது வேறு ஏதாவது
பொருட்களை புதைத்து வைத்துவிட்டு அதை தோண்டி மீட்டு எடுப்பதற்காக குழி தோண்டி
இருக்கும் என்ற பல சந்தேகங்கள் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
