வடக்கின் அனைத்து அபிவிருத்திகளும் மகிந்த ராஜபக்சவால் உருவானவை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் அல்ல என்று மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினையின் அடுத்த கட்டத்துக்கு செல்வதென்றால் வடக்கு மக்களுக்கு நான் பொய் சொல்ல விரும்பவில்லை.13 ஆம் திருத்தச் சட்டம் மற்றும் பொலிஸ், காணி அதிகாரங்கள் கொடுப்போம் என பொய் வாக்குறுதிகள் வழங்க விரும்பவில்லை. அது நடக்காத காரியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் நம்பிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கமும் இவற்றை தருவதாகவே ஆட்சிக்கு வந்தது. இந்த அதிகாரங்களை கொடுத்தால் தென்னிலங்கையில் அடிவாங்க வேண்டும். கொடுக்காவிட்டால் வடக்கில் அடிவாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.
நாங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையாக இருந்து உண்மையை கூற வேண்டும்.
இந்த நாட்டின் வரலாற்றில் அனைத்து தலைவர்களும் தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளனர்.
தமிழ் மக்கள் காலாசாரத்தில் பின்னிப்பிணைந்தவர்கள். இன்று சில தலைவர்கள் வடக்குக்கு சென்றால் சிங்கள கலாசாரத்தை மறுந்து விடுகின்றனர்.
காலாசார பிணைப்பு
தமிழ் – சிங்கள கலாசாரங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. கதிர்காமம் மற்றும் சிவனொளிபாத மலையில் இரு இனங்களும் ஒன்றாக இணைய முடியும் என்றால். அரசியல் பிரச்சினைக்கும் தீர்வைத் தேடிச் செல்லலாம்.
வடக்கில் பாதைகள் மற்றும் அனைத்து அபிவிருத்திகளும் மகிந்த ராஜபக்ச காலத்தில் செய்யப்பட்டதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனோ ஏனைய தலைவர்களோ உருவாக்கியதல்ல.
தென் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள் வடக்குக்கும் வழங்க வேண்டும். வடக்கில் அரசியல் ரீதியாக தனி நாடு தேவை போன்ற கோரிக்கைகள் இருக்கின்றன. அதற்கு எமது அரசியல் தரப்பில் தீர்வு இருக்கிறது என குறிப்பிட்டார்.
