பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் காண்பதில் அரசியல் தலையீடு ஏதும் இருக்காது என
உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
அத்தோடு, அரச அதிகாரிகள் சுயாதீனமாகவும், நிர்வாகக்
கட்டமைப்புக்கு உட்பட்டும் செயல்படுவதால், அரசின் உதவித் திட்டங்கள்
உரியவர்களைச் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிண்ணியா பிரதேச செயலகத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் குறித்த
மீளாய்வுக்கூட்டம் நேற்று (8) மாலை நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மதிப்பீடுகள்
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கான மதிப்பீடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம், வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம்,
பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட சேதம்,
பாடசாலைகளுக்கு ஏற்பட்ட சேதம் ஆகிய தொடர்பாக மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்படுவது, அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள்
உரியவரைச் சென்றடைவதற்கு வழிவகுப்பதாக மகிழ்ச்சி வெளிப்படுத்தப்படுகின்றது.
உதவித் திட்டங்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரச உத்தியோகத்தர்களாக இருந்தாலும்
அவர்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர் என்ற வகையிலேயே அவர்கள் நோக்கப்பட வேண்டும்.
அவர் ஒரு அரச உத்தியோகத்தரா இல்லையா என்பது பிரச்சனையல்ல என கிராம
உத்தியோகத்தர்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் கட்டமைப்புக்கு உட்பட்டதாக, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்
அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியது கிராம
முக்கியத்துவங்களின் கடமை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும்
தெரிவித்தார்.
